ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம்
கிளிநொச்சிக்கு இன்று (10) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளை உரிய நேரத்தில் திறப்பதில் அதிகாரிகள் காடடிய அசமந்தப் போக்கு காரணமாகவே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாக மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இரு நிறுவனங்கள் இன்னமும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதனை அறிந்துகொண்ட ஆளுநர் அவர்கள், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகவே தொடர்புகொண்டு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அத்தோடு ஐந்து நாட்களுக்கு ஒருதடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்தோடு இரணைமடு நீர்த்தேக்க வான்கதவுகளை திறப்பதில் அதிகாரிகள் காட்டிய அசமந்த போக்கினால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உண்மையை கண்டறியும் விசாரணைக் குழுவினை பொறியியலாளர் ரகுநாதன் தலைமையில் உடனடியாக மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் 21 நாட்களில் அதனுடைய அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனுக்கு உத்தரவிட்டார்.
ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் உள்ளிட அரச அதிகாரிகள் இதன்போது உடனிருந்தனர்.

Post a Comment