சர்வதேச வன பாதுகாப்பு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்...

சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் திம்புலாகலை வெஹெரகல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.
இன்று முற்பகல் திம்புலாகல வெஹெரகல மகா வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை அப்பாடசாலை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
பாடசாலையில் உள்ள பௌத்த நிலையத்திற்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி அவர்கள், புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்ததை தொடர்ந்து அதனைப் பார்வையிட்டார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக சிறந்ததோர் சூழலை ஏற்படுத்திக்கொடுத்து அனைத்து வகுப்பறைகளையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி அவர்கள் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் சர்வதேச வன பாதுகாப்பு தின நிகழ்விலும் கலந்துகொண்டார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 07 பாடசாலைகளுக்கு புத்தக பொதிகளை வழங்குதல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த, அங்கவீனமுற்றவர்களுக்கும் சிங்கராஜ வனத்தில் இடம்பெற்ற மரபணு கொள்ளையை தடுப்பதற்காக பங்களிப்பு செய்த அதிகாரிகளையும் பாராட்டி சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதி அவர்களால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டப்ளியு.ஏ.சீ.வேரகொட ஆகியோரும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.