சிறுபான்மையினரை ஒடுக்க முனைவோரே ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முயற்சி!!!
சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதி முறைமை மட்டுமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, சிறுபான்மையிரை அடக்கி ஒடுக்க முனைவோரே,இம்முறைமையை இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இலக்கியமாமணி மர்ஹூம் அ.ஸ.அப்துஸ்ஸமது நினைவாக அவரின் புதல்வர் அ.ஸ.அகமட் கியாஸ் எழுதிய 'எல்லாப் பூக்களுமே அழகுதான் 'நூலின் வெளியீட்டுவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பேசியதாவது:
இஸ்லாமிய தமிழிலக்கியத்தை இலக்கியப் பரப்பில் அறிமுகப்படுத்திய பெருமை இந்த மண்ணின் பெருமகன் அ.ஸ.அப்துல்சமது என்ற இலக்கிய ஆளுமையைச் சாரும். உலகில் எத்தனையோ பேரின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அ.ஸவின் பேச்சு மட்டுமே என்னைக் கவர்ந்தது. அவரிடம் தமிழ், சமயம் படித்த எனக்கு, அவரது முன்வைப்பைப்பற்றி நன்றாகத் தெரியும்.அது மிகப் பெரும் அலாதியானது.
அப்படிப்பட்ட ஆளுமையின் மகன் கியாஸ் ஒரு சிறந்த கல்வி நிருவாகி. அதற்கப்பால் அவரிடம் பொதிந்துள்ள நல்லபண்புகள் இலக்கிய ஆளுமைகள் இன்று 2வது நூலை சிறப்பாக வெளியிட அவருக்கு உதவியுள்ளது. இந்நூல் ஆசிரியர், மாணவர், பெற்றோர், சமுகத்திற்கு உதவும் நல்லதொரு துணை நூலாகும். இந்த நூலை 500பேர் வாசிப்பதை விட ஓடீயோ வடிவில் வெளியிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடையும்.உலகின் மூத்த மொழியான தமிழைப் பேசுவோரில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். முதலாவது இறைதூதர் ஆதம் (அலை) பேசியதும் தமிழ்தானா என்ற ஆய்வும் இப்போது தொடர்கிறது.சிவனொளிபாத மலையை அனைத்து மதத்தினரும் மதிக்கின்றனர். ஆனால் அந்த மலை யாருக்குச் சொந்தம் என்று கேட்டால் அனைவருக்குமே எனப்பதில் வரும். இம்மலையே உலகை இலங்கையின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.
நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் கிடைத்த சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையைப் பலரும் அறியத் தவறியுள்ளனர்.
எமக்கான சுதந்திரத்தை மீளப்பெறுவதற்கு விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மணிப்புலவர் மருதுர் எ மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நூல்வெளியீட்டுவிழா அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில்
விசேட அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பேராசிரியர் எ.எம். முஸாதிக், கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றூபிவலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.விழாவில் 'ஆ.ஸ. இலக்கிய மாமணி விருது வழங்கும் நிகழ்வில் முதல் விருதை பொன் விழாக்கண்ட கவிஞர் அன்புடீன் பெற்றதுடன் அவருக்கு 'கவி ஒலி' என்ற பட்டத்தையும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா வழங்கி வைத்தார்.
வெளியீட்டுரையை கவிஞர் பாலமுனை பாறுக் ஆய்வுரையை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, நயவுரையை றூபிவலன்ரீனா பிரான்சிஸ், வாழ்த்துரைகளை வயலக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் சிரேஸ்ட ஊடகவியலாளர் கவிஞர் எஸ்.றபீக் ஆகியோர் நிகழ்த்தினர்.
கவிஞர் அவ்பர் முஸ்தபா கவிமழை பொழிந்தார். இதில் சம்மாந்துறை ஸ்ரீகோரக்கர் தமிழ் மகாவித்தியாலய மாணவிகளின் செம்மொழி நடனமும் இடம்பெற்றது. நடன ஆசிரியை சௌமியாவின் தயாரிப்பிலுருவான அந்த நடனம் பலரையும் கவர்ந்தது.

Post a Comment