யாழில் ஆசிரியர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கிய அதிகாரி
வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளருக்கு எதிராக இரு பெண் உத்தியோகத்தர்கள் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அண்மையில் தீவகக் கல்வி வலயத்தில் பணிப்பாளருக்கும், சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக விசாரணைக் குழுவிடம் விபரமாக எடுத்துரைத்து வருவதோடு, தொடர்ந்தும் கடமையாற்ற மறுத்து வருகின்றனர்.
அவர்கள் அதற்கான காரணங்களை ஆவணங்களுடன் சமர்ப்பித்துள்ளனர்.
தமது அலுவலகத்திற்கு இரு பெண் உத்தியோகத்தர்களை அழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இருவரையும் கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த உத்தியோகத்தர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவரவுள்ளதோடு, நடைபெறும் விசாரணை அதற்கான தீர்வாக அமையாவிட்டால் பாரதுரமான விளைவுகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சே சந்திக்க நேரிடும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
நடைபெறும் விசாரணைகள் மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையாகவும் நடைபெறும் என்பதில் சங்கம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது.
Post a Comment